![Picture](/uploads/7/3/7/4/7374965/published/tm-9.jpg?1691781717)
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
அணையா விளக்கு ஆண்டவன்
“அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கு என்றுமேவி நின்றேனே” பாடல் 48
மெய்யடியார்கள் போற்றிப் பணியும் வானவர் தலைவன் சிவபெருமானைத் தலைதாழ்த்தி வணங்கி மூல முதல்வன் அவனே என்பதை உணர்ந்தறிந்தேன். பூவுலகில் உள்ளவர்களுக்கெல்லாம் அருளை வாரி வழங்கும் பரம் பொருள் என் உயிர்த் தந்தை ஆவான். என் உயிர்த்துணையாகிய அவனையே நான் எனக்கு வழிகாட்டும் அணையாத விளக்கென்று கருதி அவனோடு கலந்து நின்றேன்.
![Picture](/uploads/7/3/7/4/7374965/tm-9_orig.jpg)
“பரைபசு பாசத்து நாதனை உள்ளி
உரைபசு பாசத்து ஒருங்க வல்லார்க்குத்
திரைபசு பாவச் செழுங்கடல் நீந்திக்
கரைபசு பாசம் கடந்து எய்தலாமே” பாடல் 49
சக்தியாகிய உமையை இடப்பாகம் கொண்டருளிய தலைவனை உள்ளத்தால் உணர்ந்தறிந்து, அப்பரமன் அருள் பேற்றைப் பெற நெருங்குபவர்கள், பந்த பாசம் என்னும் பாவச் செயல்கள் நிறைந்த பெருங்கடலாம் மனமயக்கம், மாயை, மலங்கள் என்னும் பிறவித் துயரில் இருந்து விடுபட்டுக் கரை ஏறி ஆண்டவன் அருளுக்கு முற்றிலும் பாத்திரமாகலாம்.
நான் அறிந்த உண்மை
“சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்று
ஆடுவன் ஆடி அமரர் பிரான்என்று
நாடுவன் நான்இன்று அறிவது தானே” பாடல் 50
இறைவன் திருவடிகளைத் தலைமேல் சூடிக் கொள்வேன். அதாவது அவன் திருவடிகள் என் தலையில் படப் பணிந்து வணங்குவேன். சிவசிவ என்று சிவப்பரம் பொருள் நினைவை நெஞ்சில் என்றும் பதிய வைத்திருப்பேன். பெருமானே போற்றி என்று வாசமலர் பல தூவி அவன் புகழைப் பாடுவேன். பணிந்து பரவசமுற்று ஆடுவேன். ஆடி அவன் திருவருளை, தேவாதி தேவர் தலைவன் துணையை நாடுவேன். இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இன்று நான் அறிந்து கொண்ட உண்மை இதுதான். அதாவது இறையருள் பெற யோகம், தவம், யாகம் என்று அலையாமல் அவன் புகழைப் பாடி மனதாரத் துதித்தாலே போதும் எனத் திருமூலர் சுட்டிக் காட்டுகின்றார்.
தமிழ் வேதம் தரும் வீடு
“வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே” பாடல் 51
வேதத்தில் கூறப்பட்டுள்ளதை விடச் சிறந்த வாழ்க்கை நெறி வேறில்லை. உயர்ந்த வாழ்க்கை நெறி முறைகள் எல்லாமே வேதத்தில் விளக்கப்பட்டுள்ளன. எனவே எடுத்ததற்கெல்லாம் ஏன், எதற்கென்று தர்க்கம் செய்து, வாதம் புரிவதை விட்டு, கற்றறிந்த பெரியோர்கள், அறிவு நலம் மிக்க வேதத்தைப் படித்துணர்ந்தே வீடு பேற்றைப் பெற்றுள்ளார்கள். அதாவது வீண் வாதம் செய்யாமல் வேத நெறி கூறும் அற வாழ்வு மேற்கொண்டு அதன்படி நடந்தொழுகுங்கள். பேரின்ப வாழ்வு பெறலாம்.
மறைப் பெருமை
“வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே” பாடல் 52
வேதத்தைச் சொன்னவனும், வேதம் ஓதுபவர்கள் வேள்விப் பயன் சிறக்க வேதப் பொருள் விழங்க வைத்தவனும் உண்மைப் பரம் பொருளான சிவபெருமானே ஆவான். ஆகவே வேதங்களைச் சொன்னவன் பிரமன் என்பார்கள். ஆனால் பிரமன் வேதம் உரைத்தவனாக மாட்டான். மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் “ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான்” எனவும், திருஞானசம்பந்தப் பெருமான் தேவாரத்தில் “வேதமாய், வேள்வியாகி விளங்கும் பொருள்” எனவும் பாடியுள்ளார்கள்.
மூல முதல்வன் முக்கண் ஈசன்
“இருக்கு உருவாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்கு உணர்வாய்உணர் வேதத்துள் ஓங்கி
வெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்
கருக்கு உருவாய்நின்ற கண்ணனும் ஆமே” பாடல் 53
வேத மந்திரப் பொருளாகவும், வேதத்தின் அழகிய உருவமாகவும், உள்ளம் உருக்கும் உணர்வு தரும் வேதப் பொருளாகவும், சிறப்புக்குரியவரான வேதியர்கள் சொல்லும், உலகத் தோற்றுக்குக் காரணமாகவும் விளங்குபவன் முக்கண் முதல்வனான சிவப்பரம்பொருளேயாகும்.
பாதைகள் பல பயணம் ஒன்றே
“திருநெறி ஆவது சித்து அசித்தன்றிப்
பெருநெறி ஆய பிரானை நினைந்து
குருநெறி ஆம் சிவமாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.” பாடல் 54
இந்தப் போற்றத் தக்க சமய நெறி வழி நடப்பதாவது அறிவதும் அறியப்படாததுமான சித்து, அசித்து என்னும் இரண்டும் தவிர்ந்த உயர்ந்ததான பரம்பொருளை எண்ணி வழிபடுவதும், குரு நெறியாகிய சன்மார்க்க வழியில் ஈடுபடுவதும் பரம்பொருளைச் சென்றடைய உள்ள ஒரு வழியாகும். எனவே வேதாந்தம், சித்தாந்தம், சன்மார்க்கம், பூசைவழிபாடு என்கின்ற எல்லா வழிகளுமே இறையருள் பெற உதவும் போற்றத் தக்க சமய நெறிகளே.