(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
கந்த சஷ்டி அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞானமாகிய பரம்பொருளை அடைவதற்காக சைவ சமயத்தவர்களால் அனுஷ்டிக்கப்படும் முருகனுக்குரிய முக்கிய விரதங்களில் ஒன்றாகும். ஐப்பசி மாத அமாவாசையின் பின் வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து சஷ்டி திதி வரையான ஆறு தினங்களுக்கு இவ் விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது. ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை மட்டுமின்றி காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம் தற்பெருமை ஆகியவைகளை அழித்து நற்குணங்களை நிலைநாட்டுவதால் “ஒப்பரும் விரதம்” என கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. உண்ணாநோன்பு உடலுக்கு மட்டுமன்றி ஆன்மாவுக்கும் நல்லது. இதனாலேயே எல்லாச் சமயங்களிலும் உண்ணாநோன்பு கடைப்பிடிக்கப் படுகின்றது.