மயிலிட்டி மண்ணை எப்படி மறக்க முடியாதோ, அப்படித்தானே வாழ்ந்த வீடும் மறக்க முடியாதது. எத்தனை நாடுகளில் எப்படிப்பட்ட வீடுகளில் வாழ்ந்தாலும் பிறந்து வளர்ந்த வீட்டின் ஸ்பரிசம் என்றுமே மேன்மையானது, யாராலும் மறுக்கவும் முடியாது, மண்ணும் வீடும் மனசுக்குள் நின்று எப்போதும் காதல் செய்துகொண்டே இருக்கும்.
ஒரு நிலம் என்பது வெறும் மண்ணும் மரங்களும் கட்டடங்களும் மனிதர்களும் சூழ்ந்தது அல்ல. அந்த நிலத்தோடு பாரம்பரியங்களும் பண்பாடும் வாழ்கிறது. ஆத்மார்த்தமான ஆழமான உரிமை அங்கு பிறப்பெடுக்கும் அனைத்து உயிர்களுக்கும் இருக்கிறது. மற்றைய எல்லாத் தனிமனித உரிமைகளையும் போலவே தனது சொந்த நிலத்தில் வாழும் உரிமையும் எல்லோருக்கும் இருக்கிறது. எமது சுயதொழில்களைச் செய்து எமது சொந்தக் காலில் நிற்பதற்கு எமதுசொந்த மண்ணே வழிசெய்கிறது.
எங்களால் என்றுமே மறக்க முடியாத இடம். அதனைச் சுற்றித்தானே அனைவரும் திரிந்தோம். இளையோர் பெரியோர் என்ற வித்தியாசமில்லாமல் எல்லோரையும் ஏற்றுக்கொண்ட அதன் குணம். சிறிய இடம் தான் என்றாலும் அதனைச் சுற்றித்தானே அனைத்தும் நகர்ந்தது.
அந்த மணல் கடற்கரை பல சிறுவர்களின் மறக்கமுடியாத சில ஆரம்பங்கள். தனியாக ஒன்றும் ஆரம்பமாகவில்லை. கூடிவாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கமைந்தாற்போல் கூடினோம் ஒன்றாக, பல நிகழ்வுகள் பல மாற்றங்கள்.
விடுமுறை காலத்தில் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த எங்களுக்கு விளையாட்டு வீடு கட்ட ஆசை வந்தது. பல வாடிகளிலிருந்து உருவப்பட்ட கம்புகளினாலும் கிடுகுகளினாலும் எங்களின் சிறிய வீடு அல்லது கொட்டில் அல்லது குடில் உருவாகியது. சுவாமிப்படங்கள் உள்ளே வந்தன, பூக்கள் வைத்து விளக்கு, ஊதுபத்தி, கற்பூரம் போன்றவற்றுடன் அழகான வீடு அமைந்தது.
பிறந்த போது என்னை ஏந்திய மண்ணே!
தவழ்ந்த போது என்னைத் தாங்கிய மண்ணே ! நடை பயின்ற போது என் கைபிடித்த மண்ணே ! தாவித் தாவி நான் தரையைத் தொட்ட மண்ணே ! என் கால்விரல்களை அடிக்கடி எண்ணிப்பார்த்த மண்ணே ! அழகான மயிலை மண்ணே ! |
என்னைப்பற்றிஅருண்குமார் குணபாலசிங்கம் பதிவுகள்
April 2017
அனைத்துப் பதிவுகள்
|