“என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என திருமூலநாயனார் திருமந்திரத்தில் கூறியுள்ளார். காலத்திற்குக் காலம் இறைவன் சில ஆன்மாக்களைக் கொண்டு சில விடையங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றான். “எண்ணமே வடிவம் எண்ணுவது நானல்ல” என்பது சைவசித்தாந்த தத்துவங்களில் ஒன்றாகும். இறைவன் சம்பந்தமாக நாம் அழுக்கற்ற தூயமனத்துடன் சிவசிந்தனையுடன் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியமும் இறைவனால்ச் செய்யப்படுகின்றது என்ற எமது முன்னோரின் கருத்தை நாம் மனதில் கொள்ளவேண்டும். இறைவன் எனக்கு சைவசித்தாந்தம், திருமந்திரம் ஆகிய இரு பெரும் கடலில் சில துளிகளை படிக்க வைத்து பின்வரும் மூன்று புத்தகங்களை எழுதவைத்துள்ளான். “நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற திருமூலநாயனாரின் கூற்றுக்கு அமையவும், “சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே” எனக் கூறும் தொல்காப்பியரின் கூற்றுக்கு அமையவும் இப்புத்தங்களை நீங்களும் படித்துப் பயனடைய வேண்டும் என்பது இறைவனின் நோக்கம் என நான் கருதுகின்றேன்.