(நாகேந்திரம் கருணாநிதி)
சைவ சித்தாந்த சாத்திரங்கள்
3. சிவஞான போதம்
சிவஞான போதம். கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்கயிலாய பரம்பரையில் வந்த புறச்சந்தான குரவர் நால்வரில் (1 முதலாவது) ஒருவரான பெண்ணாகடம் மெய்கண்ட தேவநாயனார் (மெய்கண்ட தேவர்) அவர்களால் அருளப்பட்டது. இவர் பரஞ்சோதி முனிவரால் ஞான உபதேசம் பெற்று, அவரால் மெய்கண்ட தேவர் என்ற திருநாமமும் இடப்பெற்று குழந்தைப் பருவத்திலேயே இறையருள் ஞானம் பெற்றவராவார். இந்நூல் சைவ சித்தாந்த சாத்திரங்களில் மணி முடியாய் அதாவது முதல் நிலையில் விளங்கும் நூலாகும். இந்நூலுக்குப் பின் வந்த பல நூல்களுக்கு இந்நூல் அடிப்படைக் கருவூலமாக அமைந்தது. இந்நூல் தட்சணாமூர்த்தியின் திருக்கரத்தில் இருக்கும் பாக்கியம் பெற்ற நூலாகும். இந்நூல் பன்னிரெண்டு சூத்திரங்களைக் கொண்டது. ஒவ்வொரு சூத்திரத்துடனும் அச்சூத்திரத்தில்க் கூறப்பட்ட விடையத்தை விரிவாகக் கூறுவதற்காக அதிகரணங்கள் கூறப்பட்டு, அதற்கு உதாரணங்களும் கூறப்பட்டுள்ளன.