(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி)
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு , ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு”, ஒற்றுமை இல்லை எனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும். இதை இன்று நாம் எமது அன்றாட வாழ்வில் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். இன்று மனிதர்கள் மதத்தால், மொழியால், இனத்தால், நிறத்தால், அரசியலால், பிளவுபட்டுத் தங்களுக்குள் மனம் குறுகி ஒருவரை ஒருவர் பகைத்தும், சண்டையிட்டும் கொள்கின்றனர். இவ்விடையம் கணவன், மனைவி உட்பட குடும்ப உறவுகளுக்குள்ளும், ஊருக்குள்ளும், ஊர்களுக்கிடையிலும், நாட்டுக்குள்ளும், நாடுகளுக்கிடையிலும் சர்வ சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதைத் தவிர்க்குமாறுதான் எமது முன்னோர்கள் மேற்படி பழமொழியை மட்டுமல்லாமல் “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”, “ஒருகை தட்டினால் ஓசை வராது” , “இரண்டுகை தட்டினால்த்தான் ஓசை வரும்”, “தனிமரம் தோப்பாகாது”, “நீரடித்து நீர் விலகுமா” போன்ற பழமொழிகளையும் எங்களுக்குச் சொல்லிச் சென்றுள்ளனர்.